சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980′ என்று தான் இருந்திருக்க வேண்டும்.
என் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.
ஒவ்வொரு காட்சியிலும், ஏதோ ஒரு நினைவை, உணர்வை தொட்டுச் செல்கிறார்கள்.
பழமை மாறா தெருக்கள்
கம்பி போட்ட பணக்கார வீடுகள்,
உடைகள் (கலர், கலர் கட்டம் போட்ட சட்டை, பெல்பாட்டம் பேண்ட், பாவாடை தாவணி)
சிகை அலங்காரம் (ஹிப்பி, குருவிக்கூடு)
பெல்ட்கள், கண் கண்ணாடிகள்
கதாநாயகி கடித்துக் கொண்டே இருக்கும் கல் வைத்த அன்னம் டாலர்
நடுவே தகரம் இணைத்து விளம்பரம் எழுதியிருக்கும் மிதி வண்டி
பழைய ஸ்கூட்டர், அம்பாசிடர்
அலுமினிய பெயிண்ட் பூசப்பட்ட பாண்டியன் டவுண் பஸ்
கே.ஏ.எஸ் சேகர் லாட்டரி விற்பனை வண்டிகள்
லிமோ டெய்லர், காளி மார்க் கலர், ஐ டெக்ஸ் கண் மை விளம்பரங்கள்
தெருவெங்கும், எண்பதுகளில் வெளி வந்த திரைப்படங்களின் சுவரொட்டிகள்
பஞ்சு வைக்காத புகைப்பான்கள் [பில்டர் இல்லாத சிகரெட் – இப்ப தெரிஞ்சுதா
]
லாரி பட்டையிலிருந்து செய்யப்படும் கத்தி,அரிவாள்கள்
பழைய மாதிரியான மிதி ரிக்ஷாக்கள்
டீக்கடைகளில் கூட பாய்லர்கள், பூப்போட்ட கண்ணாடி டீ டம்ளர்
மதுரையின் சீட்டாட்ட கிளப்கள்
சிறைச்சாலை உள் அமைப்புகள்
அண்ணாச்சிகளே மறந்த பழைய கடை, குண்டு சோடா
தோல் தொழிற்சாலைகள்
நீளமான துணி துவைக்கும் இடங்கள்
எண்கள் சுழற்றும் கறுப்பு தொலைபேசி
கதவு வைக்கப்பட்ட கறுப்பு வெள்ளை டிவி
பெரிய பளிச்சிடும் விளக்குகள் பொருத்திய புகைப்படக்கருவி
வயர் பின்னப்பட்ட சாய்வு நாற்காலி
பழைய சென்ட்ரல் திரையரங்கம்
தள்ளிக் கொண்டே செல்லக்கூடிய திரைப்பட விளம்பர வண்டி
தியேட்டர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களின் படபெயர்களில் மின்னும் குண்டூசி வைத்து குத்தி வைக்கப்படும் ஜிகினாக்கள்
தினசரி செய்தித்தாள்களின் தலைப்பு செய்தி விளம்பரங்கள்
டீக்கடை ரேடியோக்களில் ஒலிக்கும் செய்திகளில் கூட தனி கவனம்
இன்னும் நான் விட்டுப்போன, மறந்தவைகள் எத்தனையோ.
இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், இது வரை தமிழ் படங்களில் குறைந்த அளவே வந்திருக்கும் கதையோடு ஒட்டிய ‘சிரிக்க’ வைக்கும் நகைச்சுவை.
மதுரைக்காரங்ஙளின் மண் மணம் மாறா பேச்சு (ஜெய் தவிர), ஆத்திரம், கோபம், குசும்பு, சிரிப்பு, வெள்ளந்தித்தனம், குரூரம் என அப்படியே பெயர்த்தெடுத்து காட்டியிருக்கிறார் இயக்குநர் சசிகுமார் (படத்துல பார்க்கும் போது தாடி வைத்த பாண்டியன் மாதிரி இருக்கார்). புரியும்படியான வசனங்கள். இரண்டாவது பாதியில் ஒரே ரத்தம்.
கதைக்கேற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இணை, துணை நடிக, நடிகைகள். காதைப் பிளக்காத ஜேம்ஸ் வசந்தனின் (சன் டிவியில மொத, மொத கால் மேல கால் போட்டு எகத்தாளமா உக்காந்து திரைவிமர்சனம் சொல்லுவார்ல அவர் தான். காலம் எப்படி அவரையே விமர்சனம் செய்யும் அளவு மாற்றி விட்டது பார்த்தீர்களா?) பாடல் மற்றும் பின்னணி இசை. கதாநாயகி சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி தங்களுடைய பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் பருத்தி வீரனில் பணியாற்றியிருப்பதால் இயக்குநருக்கு கூடுதல் வசதி. இப்படம் இயக்குநரையும், கலை இயக்குநரையும், இசையமைப்பாளரையும், உடை வடிவமைப்பாளரையும் மற்றும் ஒளிப்பதிவாளரையும் உழைப்பிற்கேற்ற உயரத்திற்கு கொண்டு சேர்க்கும்.
போதும்! மீதியை நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறைகளும் இருக்கிறது. மொத்தத்தில் நிறைவாயிருக்கிறது.
வாழ்த்துவோம்! வளரட்டும்!
வலைப்பதிவர்கள் கூடி தசாவதாரம் விமர்சனம் எழுதியபோது கூட, படவிமர்சனம் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஏனோ, இந்த படம் பார்த்த பின் நிறைய பேரை கூப்பிட்டு படம் பார்க்க சொல்லி, படத்தைப் பற்றியே வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன் என்பது பின் யோசித்து பார்க்கும் போது என்னால் அறியப்பட்டது.
படம் பாருங்கள்! என நான் சொன்ன பலரும் சிடி வரட்டும், பார்க்கிறேன் என்று சொன்னார்கள்.
என்ன கொடும சசிகுமார் இது
திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது சசிகுமார், சுப்பிரமணியபுரம், மதுரை, விமர்சனம், Madurai, sasikumar, subramaniapuram | 18 மறுமொழிகள் »








