எழுதீட்டு எனக்கு கொஞ்சம் காமிடா. நாம்படிச்சதுக்கப்புறம் வாத்தியார்ட்ட குடு. என்ன?
செர்ரா.
(தெப்பக்காடு, மாயாற்றைக் கடந்து செல்லும் போது எடுத்த படம் – ஒலியுடன் காணவும் )
சுற்றுலா சென்ற மாணவர்கள், முடிந்ததும், சென்ற பள்ளிச்சுற்றுலாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். எனக்கு பள்ளி விடுமுறை நாட்களில், சுற்றுலா?!? என்பது அதிகபட்சமாக தூத்துக்குடி, குறைந்த பட்சமாக திருமங்கலம் அல்லது மதுரை.
பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலாவுக்கு, நானும் பெயர் கொடுப்பேன். அது பெயராகவே இருக்கும், கடைசிவரை பணம் கட்டாதவர்களின் அட்டவணையில். பின் அந்த சுற்றுலாவை, செவி வழிச் சொற்களிலும், கட்டுரை வழி எழுத்துக்களிலும் சுற்றி வருவேன்.
அந்த கணக்கைச் சமன் செய்யத்தான், இப்போது நண்பர்களுடன் என்னால் முடிந்த அளவு/முடியும் வர பயணப்படுகிறேன்/வேன்.
என் பயணப்பதிவுகளைப் படித்தவர்கள், தங்குமிடம், முகவரி, தொலைபேசி எண்கள் வேண்டுமென்று, நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்ந்து கேட்கவே இல்லை ஓரிருவர் மட்டுமே கேட்டிருந்தனர்.
இருந்தும், வெவ்வேறு வலைத்தளங்களிலிருந்து நான் சேகரித்த தகவல்களை இணைத்திருக்கிறேன். தங்குமிடங்களின் வசதிகள், வாடகை, நம்பகத் தன்மை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்களே விசாரித்து கொள்வது நலம்.
பிள்ளையார் கோவில் தெரு – இந்தப் பெயரை சொன்னாலே, எதிராளியின் முகம் பிரகாசமாகி, ஒரு புன்முறுவல் பூக்கும். புன்னகையின் அர்த்தம் என்னவென்று சிறு வயதில் எனக்குத் தெரியாது. பின்னர் கேட்ட போது, எங்கள் தெரு அழகான இளம்பெண்கள் நிறைந்த தெரு என்று சொன்னார்கள். இங்கு தான் என் வீடும் இருந்தது.
கச்சேரி ரோட்டிலிருந்து எங்கள் தெருவில் நுழையும் போதே, வலது புறம் பெட்ரோல் பங்க்-ன் மதிற்சுவர். எதிரில் பிள்ளையார் கோவில் மதிற்சுவர். இது முடியுமிடத்தில், கோவில் திண்ணை. பக்கத்தில் நல்ல தண்ணீர் குழாய், அடுத்து உப்பு தண்ணீர் அடிகுழாய்.
பின் வரிசையாக வீட்டுக்கு ஒன்றோ, இரண்டோ திண்ணைகள் உள்ள வீடுகள் அல்லது வளவுகள் இருக்கும்.
பிள்ளையார் கோவில் திண்ணை ஒரே கரடு முரடாக, புல் முளைத்து, உட்கார மட்டுமே உபயோகமாக இருக்கும். கொஞ்சம் தெருவுக்குள் வந்தால் செல்லம்மா வீட்டு திண்ணை, செட்டியார் வீட்டு திண்ணை, சிவங்கோயில் வீட்டு திண்ணை இப்படி பல.
கிட்டங்கி வீடு – இந்த வீட்டில் இருக்கும் திண்ணை கொஞ்சம் பெரியது, திண்ணை முழுதும் வழு வழுன்னு சிமிண்டு தரை, கம்பி கிராதியோடு இருக்கும். ஏதாவது வீடுகளில் விசேசம் என்றாலோ, திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நிறைய வந்தாலோ, கிட்டங்கி வீட்டு திண்ணை தான் விருந்தினர் மாளிகை.
கிட்டங்கி வீட்டுக்கு எதிரில், பெரிய விறகுக் கடை. அதுக்கடுத்து நடுக்கடை செட்டியார் வீட்டு காம்பவுண்டு – உள்ளே எதிரும் புதிருமாக நான்கு வீடுகள் இருக்கும். வாசலின் இருபுறமும் நீளமான திண்ணைகள் உண்டு. இது ஒரு ஆள் மட்டுமே படுக்கும் அகலத்துடன் இருக்கும். கால்மாடு தலைமாடுனு ஒரு ரெண்டு பேர் படுக்கலாம் ஒரு திண்ணையில். இதுல சதுரக்கல் பதிச்சிருக்கும். மழைக்காலத்துக்கு ஆகாது.
இந்த திண்ணையில் எப்போதும், இரவில் கோணல்மானலாக கோபாலண்ணன் படுத்திருப்பார். காளிமார்க்கில் வேலை பார்க்கும் பெருமாள் எப்போதாவது. வையாபுரிப் பிள்ளை நடுஇரவில் கூட ஏதோ ஒரு பழைய புத்தகத்தை தான் வேலை செய்யும் பலசரக்குக் கடையிலிருந்து எடுத்து வந்து தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருப்பார்.
சென்னையிலிருக்கும் முருகண்ணன் முன்னாடியெல்லாம், ஊருக்கு வரும் போதெல்லாம், இந்தத் திண்ணையில் தான் உட்கார்ந்திருப்பார். சமயத்தில் வெயில் அடிச்சாக்கூட. நல்ல ஆங்கில அறிவு. கடிதங்களில் அவர் எழுதியது அச்சடித்தது போல் இருக்கும்.
ஒரு நாள், ஏண்ணே! முன்னாடி கேஸ் சிலிண்டர் போட்டுட்டிருந்தீங்க. காக்கி டவுசர் போடணும், சரி! இப்ப, ஆபீஸ்ல தான் வேலைன்னாலும் டவுசரே போட்டிருக்கீங்களே ஏன்? னு கேட்டேன்.
டேய்! நான் ஸ்கூல்ல படிக்கிறப்போ, எனக்குனு வீடு ஏதும் கிடையாது. அம்மா, அப்பாவும் சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. நான் உங்க ஆச்சி வீட்லேயோ, அல்லது நம்ம சொந்தக்காரங்க யார் வீட்லேயாவது சாப்ட்டுட்டு ராத்திரி இந்த திண்ணையில தான் படுப்பேன். இந்த போஸ்ட் மர லைட் வெளிச்சத்துல தான் படிப்பேன். அப்போ, எனக்கு ஸ்கூல் யூனிபார்ம் காக்கி டவுசர். அதுவும் ஒன்னே ஒன்னு தான் இருக்கும். ராத்திரி துண்டைக் கட்டிக்கிட்டு, டவுசரை அடிபைப்ல நனைச்சு திண்ணையில போட்டு அதும்மேல தலைய வச்சு, படுத்திருப்பேன். காத்துல பறந்து டவுசர் கீழே இருக்கிற சாக்கடையில விழுந்திருமோனு திடீர்னு முழிச்சு, முழிச்சு பாத்துக்குவேன்.
அன்னைக்கு ஒரு காக்கி டவுசர் தான்டா இருந்துச்சு. இன்னைக்கு பரவால்ல, ஆறேழு டவுசர் இருக்கு. அப்போ தான் புரிந்தது, பாசம் டவுசர் மீது மட்டுமில்லை, திண்ணை மேலும் தான்.
இரவு தெரு விளக்கு வெளிச்சம், பாடம் படிக்குமிடமாகவும், கண்ணாமூச்சி விளையாட்டு தொடங்குமிடமாகவும், பெண்கள் பேசுவதற்கு பாதுகாப்பான இடமாகவும், பஞ்சு மிட்டாய், சோன்பப்டி, சுக்கு காபி, சேலைகள், துணிகள் விற்குமிடமாகவும், தீப்பெட்டி ஒட்டுமிடமாகவும், குச்சிக்கட்டை அடுக்குமிடமாகவும் இருக்கும். பெருசுகள் தங்கள் வீட்டுக்கு வந்திருந்த கடிதங்கள், அழைப்பிதழ்களை விளக்குக்கு கீழே நின்று உத்து உத்து பார்த்து படித்துக் கொண்டிருப்பார்கள்.
திண்ணை – காலையில் எல்.ஐ.சி அய்யர் அங்கு உட்கார்ந்து பேப்பரில் லாட்டரிச் சீட்டு ரிசல்ட் பார்த்துக் கொண்டிருப்பார். பதினிக்காரர் கூடை இறங்கியிருக்கும். திண்ணையில் உட்கார்ந்து பல் விளக்கிக் கொண்டே தெருவை வேடிக்கை பார்க்கும் ஓரிருவர். பித்தளை தண்ணீர் குடங்கள் வழியில் ஓய்வெடுக்கும். மதிய நேரத்தில், வத்தல், கோதுமை, சாக்கு போன்றவைகள் வெயிலில் காயும். பசங்களின் பலவித விளையாட்டுகளில் திண்ணையும் ஒரு உறுப்பினர். பொழுது சாய்ந்ததும், ஆண்களின் அரசியல் பேச்சு. சோசியர்களின் வருங்கால கணிப்புகள் திண்ணையில். இரவானதும், திண்ணையின் ஓரங்களிரண்டிலும் அமர்ந்து பெண்கள் பொரணி பேசுவார்கள். இரவு வழிப்போக்கர்களின், வழமையானவர்களின் படுக்குமிடம், என பலமுகம் காட்டும்.
திண்ணைகளின் முகங்கள் இப்பொழுது மாறி விட்டது. பெரிய திண்ணைகள் இப்போது கம்ப்யூட்டர் சென்டர்களாகவும், சிறிய திண்ணைகள் ஜாப் டைப்பிங் ஆபீசாகவோ, அல்லது பத்திரம் எழுதுபவரின் அலுவலகமாகவோ அல்லது சிறிய அறைகளாக உருமாறிவிட்டன.
இப்போது அண்ணன் ஊருக்கு வந்தால், திண்ணைக்கு என்ன செய்வாரோ தெரியவில்லை.
ஒரு சில நண்பர்களை நாம் பார்க்கவோ, பேசியிருக்கவோ ஏன் மின்னஞ்சல் தொடர்பு கூட இருந்திருக்காது. இல்லை. இருந்தும் அய்யனார் என்னைப் புரிந்திருக்கிறார். அவரது ரசனை, மன ஓட்டம் நான் கணித்ததாகவே இருந்தது. என் கருத்து என்னவாக இருக்குமென்பதை, அவராகவே சொல்கிறார். பொருந்தியே இருக்கிறது.
சிங்கப்பூரிலிருந்து முன் தினம் வந்த கதிர் அய்யனாருடன் வந்திருந்தார். அவர் பதிவொன்றில் எனக்கு பிடித்தது – பாகிஸ்தானியுடன் பயணித்த அனுபவத்தை ஒரு குறும்படத்தின் அம்சங்களுடன் எழுதியிருப்பார். மிரட்டும் தோற்றமாயிருந்தாலும், பழக மிகச்சுவாரசியமான, இலகுவான மனிதராயிருந்தார். இவர் அய்யனாருக்கு சரியானதொரு இணை.
அய்யனார் கோவை வருவதாகவும், வனம் புக வேண்டும் என்றும் தொலைபேசினார். மிகக்குறுகிய கால இடைவெளி. காந்தி ஜெயந்தி விடுமுறையுடனான வார இறுதியாகையால், மலைப்பிரதேசங்களில், சாதாரண அறை கூட கிடைக்காத நிலை.
அண்ணாச்சி, சஞ்சய், செல்வேந்திரனுடன் ஏற்பாடுகளுக்குத் தயாராய் நானும். மற்ற நேரங்களில், வருகிறோம் என்று தகவல் தெரிவித்தாலே, நாம் கிளம்புமிடத்திலிருந்து நம்மை தொலை பேசியில் தொடரும் விடுதிக்காரர்கள், நாங்கள் தேதி சொன்னதும் அறை காலியில்லையுடன் முடித்துக் கொண்டார்கள்.
பயணத்தேதிக்கு முன் காலை, தேவராஜன், தம் நண்பரின் உதவியுடன் தங்குவதற்கு ஆவன செய்தார். அதற்குப் பின், வரும்/கிளம்பும்/திரும்பும் நேரம்/நண்பர்கள் பற்றி விவாதித்து முடிக்கப்பட்டது.
இரண்டாம் தேதி காலை அய்ஸ், கதிர், சிவக்குமரன் கோவை வந்து சேர, அண்ணாச்சியும், சஞ்சயும், மழையும் மாலையில் வழியனுப்ப பயணம் தொடங்கியது. அண்ணாச்சி வராததால், எனக்கு மேலதிக பொறுப்பும், கூடவே அறிவுரைகளும். வழிநெடுக, அய்யனார் மழைத்தூறலுக்கு தலையும், பனிமூட்டத்துக்கு வியப்பும் காட்டினார். இடையில் ஒரு இடத்தில் அய்யனார் இறங்கும் போது, அவரது கவிதையொன்றை உரக்கச் சொல்ல, பனிமூட்டம் விலகி மலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.
பொக்காபுரம் என்ற இடத்தில் தங்குமறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதகை, மசினகுடி – அங்கிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் பொக்காபுரம். விடுதிப் பொறுப்பாளரை வழிநெடுக முயற்சித்தும், அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவரது தம்பி தொடர்பு கொண்டார். வழியும், வேறு தொடர்பு எண்ணும் வாங்கிய பின் தான் எனக்கு நிம்மதி.
மசினகுடியிலிருந்து, பொக்காபுரம் செல்லும் வழியே வனம் தான். மான் கூட்டம், காட்டெருமை மற்றும் கழுதைப்புலி காணக் கிடைத்தது. பொக்காபுரத்திலிருந்து விடுதிக்கு செல்வதற்கு குறுகிய மண்பாதை மட்டுமே. சுற்றிலும், மூங்கில் புதர்கள் சூழப்பட்ட இடத்தில் – வண்டி நிறுத்துமிடம்
ஒற்றைக் குழல் விளக்கு வெளிச்ச, சிறு பாதையில் நடந்தால் விடுதி. வாசலில் இருபக்கமும் மிகப்பெரிய பாறை. மேலாளர் வரவேற்று, எங்களின் அறைக்கு கூட்டிச் சென்றார். அறைகள் மூங்கில்களின் முன்/பின் புலத்தில் இருந்தன. விடுதி மிகச்சிறந்த ரசனையாளர்களால், சுற்றிலும் வேலிப் பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்டிருந்தது. இடமாக வாங்கிய போதிருந்த மரங்கள், மூங்கிற்புதர்கள், பாறைகள் எதையும் அப்புறப்படுத்தாது, உள்ளது உள்ளபடியே விட்டு, அதனூடே அறைகளை அமைத்திருக்கிறார்கள்.
காய்ந்த இலைகளில் விழும் மழைச்சத்தமும், மூங்கில்கள் காற்றிலசைந்து உராயும் சத்தமும் புதிதாய் இருந்தன.
குன்னூரில் குழுமியிருந்த அண்ணன் காசி, ஜ்யோவ்ராம் மற்றும் வால் அலைபேசியில் அய்யனாரிடம் நலம் வினவினர்.
நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துண்ணும் வகையில் தனியிடத்தில் உணவு ஏற்பாடுகள். அமர்வதற்கேதுவாய் அரைவட்ட மூங்கிலிருக்கைகள். தட்டு வைப்பதற்கு மரத்தடிகள். எங்களின் இரவுணவுக்காய் பணியாளர்கள் விழித்திருந்தனர். மாரி என்ற பணியாளர் கடைசி வரை எங்களுக்கான தனிக்கவனிப்பாளரானார்.
மறுநாட் காலை வழக்கமான சுற்றுலா இடங்களை தவிர்த்து, மனம் போன போக்கில் கூடலூர்ப் பாதையில் பயணித்தோம். துளிர்த்த மழைத் துளி, சுழித்தோடும் காட்டாறு ரசித்தாவாறே பயணம். மண்ணுடன் கலந்த நீரோடியதால், ஆற்றுக்குளியலாசை துறந்தோம். இஷ்டம் போல் இடை நிறுத்திக் கொண்டோம். நீரருந்த வந்த மான் கூட்டம் யாரடா இவர்கள்? என வெருண்டன. தனித்த காட்டெருமை தலை தூக்கி, என்ன? என்ற கம்பீரம் காட்டியது. மூங்கில் மரங்கள் பாதைக்கு இருட்கூரை வேய்ந்திருந்தன.
இருப்பிடந்திரும்பி, இளைப்பாறிய சிறிது நேரத்தில், வனமழைத்துச் செல்லும் நண்பர் வந்து விட்டார். அவருடைய ஜீப்பில் பயணம். நண்பர் அவ்வூரைச் சேர்ந்தவர். வெளிநாட்டுப் பயணிகளை மலையேற்றத்திற்கும், வனச்சுற்றுக்கும் அழைத்துச் செல்பவர். பிரபல விலங்காராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாயுமிருந்திருக்கிறார். மேலும், குடியிருப்புகளுக்கு வரும் பாம்புகளைப் பிடித்து வனத்திற்குள் விட்டு வரும் சேவையும் செய்கிறார். வனங்கள், வனவிலங்குகளைப் பற்றியும், வன அதிகாரிகளுடனான கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இருளில் நம் கண்களுக்கு அகப்படாத விலங்குகள் அவருக்கு மட்டும் புலப்பட்டன. முதலில் யானைகள். பின் காட்டெருமைகள் – வண்டியின் விளக்குகளணைத்து, ஆண் காட்டெருமை போன்று இவர் ஒலியெழுப்பியவுடன், காட்டெருமைக் கூட்டத்திலிருந்து பதில் ஒலி வந்தது அசாத்தியம்.
வழியெங்கும் மான் கூட்டங்கள் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன. குடியிருப்புகளை ஒட்டிய இடங்களில் மான்கள் அதிகம் இருக்குமாம். மனிதநடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வேட்டையாடும் மிருகங்கள் வரும் வாய்ப்பு குறைவாம்.
மழையால், மண்பாதைகள் சகதியாயிருந்ததால், வெவ்வேறு இடங்களுக்கு கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் சுற்றியலைந்தோம். விடுதி திரும்பும் வழியில், வேகமாய் சென்று கொண்டிருந்த வண்டி திடீரென்று நிறுத்தப்பட்டது. எதிரே பாதையில் ஆறேழு யானைகள் குட்டியுடன். முன் நின்று தென்னைக்கீற்றிழுத்துக் கொண்டிருந்த யானை எங்களைக் கண்டு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது. குட்டியை இரு யானைகள் தங்களுக்கிடையில் லாகவமாய் பத்திரப்படுத்தியது.
நண்பர் முகப்பு விளக்கணைத்து, ஒரு வினோத குரலெழுப்ப, கூட்டத்திலேயே மிகப்பெரிய யானை எங்களைத் தாக்க ஆவேசமாய் வந்தது. யானை எங்களையடைய சில அடிகளே இருந்தது. அதற்குள் சிவக்குமரன் பயந்து வண்டியை பின்னே எடுக்கச்சொல்லி குரல் கொடுக்க, நண்பர் வண்டியை பின்னோக்கி செலுத்தினார். எங்களைத் தாக்க வந்த யானையும் கூட்டத்தை ஒருங்கிணைத்து பக்கப்பாதையில் சென்றது.
பின் நண்பரிடம் விசாரித்ததில், ஒவ்வொரு யானைக்கூட்டத்திற்கும் ஒரு யானை தலைமையேற்று நடத்திச் செல்லுமாம். நண்பர் எழுப்பிய வினோத ஒலி, ஆபத்தைக் குறிக்கும் சமிக்ஞை. ஒலி கேட்டு, ஏதோ ஆபத்து என்று தலைமை யானை எங்களைத் தாக்க வந்தது. நண்பரும் வண்டியை பின்னோக்கி செலுத்த தயாராய்த் தான் இருந்தார். கோவில்களிலிலும், முகாம்களிலும் பார்த்த யானைக்கும், இதற்கும் நிறைய வித்தியாசங்கள். எங்களை நோக்கி ஓடி வந்த போது ஏதோ ஒரு கறுப்பு பிரம்மாண்டம் நம்மை நோக்கி வருவது போல் இருந்தது – ஆங்கிலப்படங்களில் டைனோசர் மற்றும் விநோத விலங்குகளின் அருகாமை காட்சி போல.
நானும், செல்வேந்திரனும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தோம். மற்றவர்கள் எச்சரிக்கையாக பின்னிருக்கையில் செல்வேந்திரனுக்கு அதே இரவிலும், கற்பனையிலும் துரத்திய யானை தான்
மேலும், சூழ்நிலைக்கேற்றவாறு எப்படி தப்புவது என்பதும், எங்கள் வன வழிகாட்டிக்கு தெரிந்தே தான் இருந்தது.
(கிட்டத்தட்ட எங்களது அனுபவமும் இந்த யூ ட்யூப் படத்தை ஒத்தே இருந்தது. இரவானதால் படமெடுபடவில்லை)
இரவு ஒன்பதரைக்கு ஆரம்பித்த பயணத்தை, ஒரு மணிக்கு முடித்துத் திரும்பினோம். இரவுணவு முடிக்கும் போது மணி இரண்டு. காலை ஊர் திரும்ப ஆயத்தமாயிருந்த வேளையில், விடுதி நண்பர் அருகிருக்கும் ஒரு வீட்டை காண்பிப்பதற்காய் கூட்டிச் சென்றார். அறையின் பக்கவாட்டுப் பாதையில் வேலி தாண்டிச் சென்ற போது யானைகள் நேற்றிரவு வந்து சென்றிருப்பதற்கான தடயங்கள்.
யானைகள் சேதப்படுத்த முடியாத கருங்கற்களால் கட்டப்பட்ட ரசனையான பரந்த வீடு. உரிமையாளர் வெளி நாட்டிலிருந்து வந்து ஓரிரண்டு நாட்கள் தங்கிச் செல்வாராம். இங்கும் சுற்றிலும் மூங்கில் புதர்கள். வீட்டின் முன் மூங்கில் துண்டுகளில் துளையிட்டு சிறு செடிகள் வளர்க்கப்பட்டு, தொங்க விடப்பட்டிருந்தன.
மூங்கில்கள் இப்பகுதி மக்களின் வாழ்வின் முக்கியமாய் இடம் பிடித்திருக்கிறது. சிறு சிறு பொருட்கள் மூங்கில்களாலே செய்கிறார்கள். தங்குமிடத்தில் சுவர் எழுப்புவதற்கு பதில் மூங்கில், மேசை, நாற்காலிகள், கைத்தாள் செருகி வைப்பதும் மூங்கில் குழலில் தான். ஏன் அறைச்சாவி இணைத்திருப்பதும் சிறு மூங்கில் துண்டில் தான். மண்ணும், மழையும், மரமும், மனிதர்களும் மூங்கில்களே!