குளிக்கச்சென்ற 2 சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் பலி – சற்றுமுன்-ல் வந்த செய்தி.
வராத செய்திகள்
கும்பக்கரை அருவி பெரியகுளம் என்ற ஊருக்கு மிக அருகில் இருக்கிறது. சில திரைப்பட கேமராக்களில் இதன் சாரல் அடித்திருக்கிறது.
அருவிகள் எவ்வளவுக்கெவ்வளவு அழகானதோ அதே அளவில் ஆபத்தும் இருக்கிறது.
அருவிகளில் தண்ணீர் விழுந்து ஓடும் இடங்களில், மிகப்பெரிய பள்ளங்கள் இயற்கையாகவே இருக்கும்.
கும்பக்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் பாறை தான் இருக்கிறது என நீங்கள் தண்ணீரில் காலை வைத்தீர்களென்றால் அதள பாதாளத்திற்கு சென்று விடுவீர்கள்.
மேலே வர முயற்சிக்கையில் அருவி தண்ணீர் இன்னும் வேகமாக நீரின் போக்குக்கு ஏற்றவாறு கீழ் நோக்கி அழுத்தும்.
எப்பேர்ப்பட்ட நீச்சலர்களாக இருந்தாலும் மேலே வர முடியாது. மேலும், நீங்கள் உள்ளே போன பகுதி மிகக்குறுகியதாயிருக்கும்.. ஆனால் உள்ளே மிகப்பெரிய இடமாகவும், மேல் எழும்பி வர முயற்சிக்கையில் தலையில் பாறை தட்டி திரும்ப திரும்ப உள்ளே தான் போக வேண்டிவரும்.
இது போன்றதொரு பள்ளத்தை அளவிடும் போது கஜம் என்று குறிப்பிடுவார்கள். 2 யானை கஜம், 5 யானை கஜம் என்று சொல்லுவார்கள்.
இந்தப்படத்திலிருக்கும் பாறை தண்ணீருக்குள் இருந்தால் எப்படி இருக்குமோ, அது போல பாறைகளின் அமைப்பு இருக்கும்.
எனவே கும்பக்கரை அருவிக்கு போகும் போது தண்ணீருக்குள் தெரியாமல் இறங்க வேண்டாம்.
நண்பர் செல்வேந்திரன் கொடிவேரி அருவியைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததின் விளைவு தான் இப்பதிவு..
கொடிவேரி அருவி குற்றாலம் போல பெரிய அருவி கிடையாது. கரடுமுரடான இடத்தில் நின்று தான் அருவித்தண்ணீரில் தலைகாட்டமுடியும். ஆனால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமானதாக இருக்கும். படப்பிடிப்புகளுக்கு புகழ் பெற்ற கோபிசெட்டிபாளையம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. இந்த அருவியும் சில படங்களில் தண்ணீர் காட்டியுள்ளது.
இந்த அருவியில் குளித்து உயிரழந்தவர்கள் நிறைய. சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த் என்ற இளைஞனும், அவரது நண்பரும் மிகக்கொடூரமான முறையில் இறந்திருக்கிறார்கள்.
ஆனந்த் அருவி தண்ணீர் ஓடுமிடத்தின் நடுவே உள்ள பாறையில் நின்று தலை துவட்டிக் கொண்டிருக்கும் போது, தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த நண்பர் அலறும் சத்தம் கேட்டு, காப்பாற்றப் போய் அவரையும் தண்ணீர் உள்ளிழுத்துக் கொண்டது.
பின் இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்களின் உடல்களை தேடி எடுத்து தருமாறு அங்கிருக்கும் நீச்சல் அனுபவம் வாய்ந்தவர்களிடம் வேண்ட,
நீண்ட நேரத்தேடலுக்குப் பின் உடல் கண்டெடுக்கப்படுகிறது.
இதன் பின் உள்ள சதி என்னவென்றால், அந்த அருவியைச் சுற்றியிருக்கும் ஒரு சில கயவர்கள் தண்ணீரின் வேறு பகுதியில் இறங்கி தண்ணீருக்குள்ளேயே சென்று குளித்துக் கொண்டு இருப்பவர்களின் கால் பிடித்து உள்ளே இழுத்து செல்லப்பட்டு பாறை இடுக்குகளில் கட்டி வைக்கப்படுகின்றனர். அதனால் மூச்சு திணறி இறந்து விடுகின்றனர்.
ஆனந்த் தன் நண்பன் உள்ளே இழுத்து செல்லப்படுவதைப் பார்த்து விட்டதால் அவனையும் தண்ணீருக்குள் இழுத்துக் கொன்றார்கள்.
கரையில் இருந்து பார்த்தவர்களும் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.
தேடி வரும் பெற்றோர்களின் வசதியைப் பொறுத்து, பேரம் பேசி ஆயிரங்களோ, லட்சங்களோ வாங்கிய பிறகு உடல்களை எடுத்து தருகிறார்கள்.
எனவே இத்தகைய அருவிகளுக்கு போகும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். அந்திசாயும் வரை அங்கு இருக்காதீர்கள்.
கோபி மற்றும் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் இது பற்றி உங்கள் கருத்துகளை எழுதலாமே?
்.






//இதன் பின் உள்ள சதி என்னவென்றால், அந்த அருவியைச் சுற்றியிருக்கும் ஒரு சில கயவர்கள் தண்ணீரின் வேறு பகுதியில் இறங்கி தண்ணீருக்குள்ளேயே சென்று குளித்துக் கொண்டு இருப்பவர்களின் கால் பிடித்து உள்ளே இழுத்து செல்லப்பட்டு பாறை இடுக்குகளில் கட்டி வைக்கப்படுகின்றனர். அதனால் மூச்சு திணறி இறந்து விடுகின்றனர்.//
கேட்கவே குலை நடுங்குதே? உண்மை தானா? இது குறித்து ஏன் சட்ட நடவடிக்கை இல்லை? உதகை பைகாரா அருவியில் எங்கள் கல்லூரி இளையோர் ஒருவர் இதே போல் பாறை இடுக்கில் சிக்கி இறந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த இன்னொருவரும் சிக்கிக் கொண்டது பரிதாபம்
என்ன பண்ணுவது. இது இயற்கையா அல்லது செயற்கையா என்று நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும் ரவி!.
மேலும், தண்ணிக்குள் மூச்சடக்கி சென்று உடல்களை எடுப்பதற்குரிய அனுபவசாலிகள் சில பேர் தான். தெரியாதவர்கள் தண்ணிக்குள் சென்றால் வழி தெரியாமல் உள்ளேயே சிக்கக்கூடும்.
காவல் துறையும் உடல்களை தேடி எடுக்க அவர்களையே நம்பியிருக்க வேண்டியதிருக்கிறது.
குளித்துக் கொண்டு இருப்பவர்களின் கால் பிடித்து உள்ளே இழுத்து செல்லப்பட்டு பாறை இடுக்குகளில் கட்டி // வெயிலான் படித்துவிட்டு அதிர்ந்து போனேன். மேற்கண்ட விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தும்படி எனது பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் கூறியுள்ளேன்.
// மேற்கண்ட விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தும்படி எனது பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் கூறியுள்ளேன். //
நன்றி! செல்வா!