தமிழ் மணத்துக்கு எப்பவும் என்னோட இடுகைய கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம பேர் வந்திருக்கான்னு ஆர்வக்கோளாறுல திரும்ப வந்து பார்ப்பேன். பார்த்துக்கிட்டே இருக்க, இருக்க, நம்ம இடுகை, கீழேயே போய்ட்டே இருக்கும்ங்க. நம்ம நட்சத்திரம் இருக்கார் பாருங்க, அவர மட்டும் கீழேயே எறக்க மாட்டாங்க.அப்புறம் என்ன, அய்யனாரின் இந்தப் படம் மாதிரி அண்ணாந்து நட்சத்திரத்தப் பாத்துட்டே இருப்பேன்.
இப்படிப் பாத்துட்டே இருந்த என்ன, அடுத்த ஏழு பகலைக்கும், ஏழு சாமத்துக்கும் மங்காத நட்சத்திரமா இருக்கச்சொல்லீருக்காங்க. பெரிய பெரிய ஆளுக நட்சத்திரமா சொலிச்சுட்டிருந்த வானத்தில் இந்த சாமானியனும்.
நா கவிஞனோ, கதாசிரியனோ கிடையாது. சாமானியன். வாழ்க்கையில ஒத்த ஒத்த மணித்துளியிலும் நடக்கிறத பாத்து ரசிக்கிறவன். ரசிப்புதேன் வாழ்க்கை. என்ன சொல்றீ்ங்க?
நான் பாத்தத,பழகுனத,நெனப்ப,நெசத்தத் தான் எழுதிக்கிட்டிருக்கேன்! எழுதுவேன்.
தெக்கு தெசயில இருக்குற ஊர்ல, ஊர்ன்னு சொல்றத விட பெருங்கிராமத்துலருக்குற, தனியாரு தொழிற்சாலயில வேல பாத்து என்னயும், தம்பிகளயும், பட்டப்படிப்பு படிக்க வச்சதே என் அப்பாவும், அம்மாவும் செஞ்ச சாதனைன்னு தாங்க சொல்லணும்.
எங்கப்பா சம்பளக்கவரு வாங்கிட்டு வந்தவுடன், ஒக்காரச்சொல்லி, மாச வரவு, செலவுக்கணக்க எழுதச்சொல்லுவாரு.
” எழுபத்தைஞ்சு ரூவா தான் மிச்சம், இந்த மாசம். இதுக்குள்ள தான் சினிமாக்குப் போறது,கல்யாண வீடு், கருமாதி வீடுன்னு எல்லாச்செலவும்னு சொல்லி அம்மாட்டக் குடு “
அப்புடிச்சொல்றது எங்கம்மைக்கு மட்டுமில்ல, எனக்கும், என் தம்பிகளுக்குந்தான். அப்புடி சுரீர்ன்னு உரைக்கும். மேக்கொண்டு எதுவும் கேட்டு வாயே தெறக்க முடியாது.
மாசாமாசம் பணப்பற்றாக்குற தான். அதுக்கு என்ன செய்றது, அதான் நம்ம மாவட்டத்தொழில் இருக்கே, கந்தக பூமியில் கதிர் அறுக்கவா முடியும். தீப்பெட்டி ஒட்டுறது தான். எப்பவாவது நமக்கு காசு வேணுமுன்னா மட்டும் அம்மாவோட சேர்ந்து உக்காந்து தீப்பெட்டி ஒட்டுறது.
படிப்பு முடிச்சதும், என்ன வேல கிடைக்குதோ, எல்லா வேலயும் – ஆடிட்டர் ஆபீசு, பத்திர ஆபீசு, சிவில் சப்ளை ஆபீசுல, கலெக்டர் ஆபீசுல, தாலுகா ஆபீசுல இலவச வேட்டி சேல பட்டியல் தட்டச்சுறது, பாண்டியன் கிராம வங்கியில பியூனா.,
வேலை ஒண்ணும் சரியாவராததுனால யு.எஸ் வந்துட்டேன். திருப்பூர் தாங்க அது. இத டாலர் சிட்டின்னு தான சொல்றாங்க.
இங்க பாத்தீங்கன்னா, வாழைப்பழக்கடக்காரர் ‘எந்த ஊர் உங்களுக்கு ‘ ன்னு கேக்குறார், விசயம் என்னன்னா, இங்க யாரும் வெல கேட்டு வாங்க மாட்டாங்களாம். அப்புடி கொழுத்துப்போய்க் கெடக்கு பணம் எல்லார்ட்டயும்.
குறுக்கு வலிக்க பத்து மணி நேரம் தீப்பெட்டி ஒட்டுனா, வாரத்துக்கு அம்பதோ, அறுபது ரூவாயோ கெடைக்கும். ஆனா இங்க பொண்டு, பொடுசுக எல்லாம் வாரத்துக்கு ஐநூறு, அறுநூறு ரூவா சம்பளம் வாங்குதுக.
எண்ணி செலவு பண்றது் கெடயாது, எண்ணியும் செலவு பண்றதும் கெடயாதுங்க.
ஆம்பளைக பூராம் சனிக்கிழமையன்னிக்கு டாஸ்மாக் தானுங்க, பொண்டு, புள்ளைக எல்லாம் சாதாரணமா, அம்பது, நூறுக்கு வளையலு, தோடு, சடமாட்டி அப்புடின்னு வாங்கி காச கண்ணு மண்ணு தெரியாமச் செலவழிப்பாங்க.
ஆனா ஒண்ணுங்க, எல்லாரும் பாசக்கார பய புள்ளைக. அம்புட்டு ஊருலருந்து வந்த சனமும், சாதி வித்யாசம் இல்லாம, தாயா, புள்ளயா பழகுறாங்க. அதுனால மத்தத விட்டுத்தள்ளுங்க.
என் வாழ்வியல் அனுபவங்கள், நடந்த சம்பவங்கள், கடந்த மனிதர்கள் இதப்பத்தி தான் நட்சத்திர வாரத்தில் எழுதப்போகிறேன். கண்டிப்பா உங்க கருத்துக்களச் சொல்லுங்க. அது மூலமா என்னை மெருகேத்திக்கிறேன்.






வாழ்த்துக்கள் நண்பா..! கந்தக பூமியின் வெக்கையை, தீப்பெட்டி ஒட்டி காய்த்து கிடக்கும் அக்காக்களின்/அம்மாக்களின் வேதனையை, இருக்கன்குடி கோயிலில் தினந்தோறும் குவியும், மூன்றுவேலை நிம்மதியான சோறுக்கான பிரார்த்தனைகளை, இந்த நட்சத்திர வாரத்தில் பதிவிடுங்கள்.
நன்றி! நண்பரே, வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும்.
நிச்சயம் கந்தக பூமியின் வெக்கை அடிக்கும் வாரம் முழுவதும்.
வெயிலான்,
வாழ்த்துக்கள்,
எழுத்து இயல்பாக இருக்கு ! நினைக்கறதை அழகா எழுதுறீங்க !
//வேலை ஒண்ணும் சரியாவராததுனால யு.எஸ் வந்துட்டேன். திருப்பூர் தாங்க அது. இத டாலர் சிட்டின்னு தான சொல்றாங்க.//
என் கணவருடைய நண்பர் வந்திருந்தார்- ‘உங்களுக்கு எந்த ஊரு’ன்னு கேட்டேன். உங்க கணவர் ஊருதான் யு.கே. என்றார். UdanKudi-யை யு.கே.ன்னு சொல்வது அவருக்கு பெருமையா இருந்திருக்கு. நீங்க திருப்பூரை யு.எஸ். என்றதும் எனக்கு அது நினைவுக்கு வந்திடுச்சு
//என் வாழ்வியல் அனுபவங்கள், நடந்த சம்பவங்கள், கடந்த மனிதர்கள் இதப்பத்தி தான் நட்சத்திர வாரத்தில் எழுதப்போகிறேன். //
ம்ம் எழுதுங்க. நட்சத்திர வாழ்த்துகள்.
அருமை அருமை வெயிலான்…நேர்ல சொல்ற மாதிரி…முதல் பதிவே மனதை தொட்டுவிட்டது வாழ்த்துகள்…
//தெக்கு தெசயில இருக்குற ஊர்ல, ஊர்ன்னு சொல்றத விட பெருங்கிராமத்துலருக்குற, தனியாரு தொழிற்சாலயில வேல பாத்து என்னயும், தம்பிகளயும், பட்டப்படிப்பு படிக்க வச்சதே என் அப்பாவும், அம்மாவும் செஞ்ச சாதனைன்னு தாங்க சொல்லணும். அந்த வரிசயில இப்ப என் மனைவியும் (நம்ம கூட காலம் தள்றதே சாதனை தாங்க).///
நமக்காக ஏங்கிய, ஏங்கும் மனதை நினைத்துப்பார்ப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பது உறுதி…வாழ்த்துக்கள் வெயிலான்.
WELCOME VAAZHTHUKKAL
நட்சத்திர வாழ்த்துக்கள்! இயல்பான நடையில், வெகு இயல்பாக உங்களை அறிமுகப் படுத்தியது மட்டுமில்லாமல், என்ன சொல்ல போறீங்கன்னு சொன்னதுக்கும் நன்றி!
///UdanKudi-யை யு.கே.ன்னு சொல்வது அவருக்கு பெருமையா இருந்திருக்கு.///
என் நண்பர் ஒருவர் கூட, எங்க வேலை பார்க்கிறீங்க? என்று கேட்டால், துபாய்ல வேலை பார்க்கிறேன் என்று சொல்லுவார்.
திருப்பூரிலியே இருப்பதைத் தான் பார்க்கிறேன்…. என்று சந்தேகமாக கேட்டால், ஹி! ஹி! ‘துபாய் கார்மெண்ட்ஸ்’ என்ற கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்று சொல்லுவார்.
என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்திய
ஆழியூரான்,
கோவி.கண்ணன்,
ஜெஸிலா,
மங்கை,
கண்மணி,
காட்டாறு
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
வாழ்த்துக்கள் வெயிலான் அருமையான அறிமுகம்..
நட்சத்திரம் வாரம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
மிக நல்ல அறிமுகம் வெயிலான்..
கற்பனைக்கு சற்றும் சளைத்ததில்லை வாழ்வியல் அனுபவங்கள், நடந்த சம்பவங்கள், கடந்த மனிதர்கள் ..
வாசிக்க காத்திருக்கிறோம்
நட்சத்திர வாழ்த்துக்கள்
நன்றி! முத்து லட்சுமி, நாகை சிவா, அய்யனார்.
ஒரே நட்சத்திரங்களின் வருகையா இருக்குது!
நட்சத்திர வாழ்த்துக்கள்//
a Little late..
//ஆம்பளைக பூராம் சனிக்கிழமையன்னிக்கு டாஸ்மாக் தானுங்க, பொண்டு, புள்ளைக எல்லாம் சாதாரணமா, அம்பது, நூறுக்கு வளையலு, தோடு, சடமாட்டி அப்புடின்னு வாங்கி காச கண்ணு மண்ணு தெரியாமச் செலவழிப்பாங்க.//
நான் ஈழத்தவன்; எனக்கு இந்த வட்டார மொழி நடை மிகப் பிடிக்கும். இந்த நடை உங்களுக்குச் சிறப்பாக வருகிறது.
வாழ்த்துக்கு நன்றி டெல்பினம்மா!
///நான் ஈழத்தவன்; எனக்கு இந்த வட்டார மொழி நடை மிகப் பிடிக்கும்.///
எனக்கு ஈழத்து நடை பிடிக்கும். நன்றி யோகன்.
மிக மிக அருமையாக இருக்கிறது, உங்கள் வார்த்தை நடை……
இயல்பை மிக இயல்பாக சொன்னமைக்கு வாழ்த்துகள்…..
திருப்பூரில் திரையரங்கில் நுழைவுச் சீட்டு வாங்கி விட்டு மீதி சில்லறையை கூட வாங்குவது கிடையாது.
“பனியன்” கம்பெனி சிறார்கள்….. அவ்வளவு வனப்பு… – இது கண்டதும்..கேட்டதும்.
/// மிக இயல்பாக சொன்னமைக்கு வாழ்த்துகள்///
நன்றி! நண்பர் பொன்.கருணாநிதி (Ponka).
என் அனுபவத்தைத் தான் எனக்கு தெரிந்த வரையில் இயல்பாக எழுதுகிறேன்.