ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சமயத்தில் ஒருவர் குருவாக இருந்திருப்பார், கிடைத்திருப்பார் அல்லது நினைத்திருப்பீர்கள். நான் சொல்வது ஆசிரியர் அல்ல. உங்கள் குரு ஒரு கடவுளாகவோ, மத குருவாகவோ, தலைவராகவோ அல்லது கடவுள் மறுப்பராகவோ இருந்திருக்கக் கூடும்.
எனக்கும் ஒரு குரு கிடைத்தார். சிறு வயதில் நான் படித்த மாதா, பிதா, குரு என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணரலானேன்.
கடவுள் நம்பிக்கையற்றவர். என்னிடம் ஒரு நண்பனைப் போல் பழகும் தன்மையுடையவர். ஒருவரைப் பார்த்து, பேசிய சிறிது நேரத்திலேயே, அவருடைய அறிவுத் திறனளவு, பண்பு மற்றும் குணநலன்களை ஓரளவு அளவிடும் ஆற்றல் மிக்கவர்.
என்னைப்பற்றிய அவருடைய அளவீடுகள் உண்மைக்கு மாறாய் இருந்ததனால், என் மேல் அதீத அன்புடையராகவும், அளவு கடந்த நம்பிக்கையோடும் இருந்தார். நீ செய்! உன்னால் முடியுமென முழு நம்பிக்கை வைத்து ஒவ்வொரு வேலையையும் முடிக்கச் செய்வார்.
அனைவரிடத்திலும் என்னை பற்றி ஏதாவது புகழ்ந்து பேசுவார்.
பேசும் போது அவர் கண்கள் என்னிடம் நிலைத்திருக்கும். முகத்தின் பிரதிபலிப்பை கூர்ந்து நோக்குவார். புகழ்ச்சியைக் கண்டு முகம் மலரும் போது நம் பலவீனத்தையும் கூறி அந்தப் பெருமை பலூனை வெடித்து விடுவார்.
நேர்மையின் முழு அர்த்தமும் பல செயல்களின் மூலமாக அவரிலிருந்து தான் எனக்கு புரிந்தது.
தனக்கென சில கொள்கைகள் வைத்திருந்தார். எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். இதனாலேயே சில பணிகளை அவரால் தொடரமுடியாமல் போயிற்று. ஆனால் என்னிடம் சில நேரங்களில், சில விசயங்களில் மட்டும் விட்டுக் கொடுத்தார். அப்போது அவரிடம் கேட்டேன்.
உங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்களே? இப்போது எப்படி என்று? கேட்டதற்கு சொன்னார்,
பெரும்பாலும், வீட்டில் ஒரு பண்டத்தை கடவுளுக்கு வைத்து படைக்கும் வரை யாரும் உண்ணக் கூடாது என்ற கண்டிப்புடன் இருப்பார்கள். ஆனால் வீட்டிலிருக்கும் குழந்தை படையலுக்கு முன் கேட்கும் போது பண்டத்தை எடுத்து தின்னக் கொடுப்பார்கள். அது போல, நெகிழ்த்திக் கொள்ளலாம், ஆனால் கொள்கைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றார்.
கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சென்று பலதரப்பட்ட துறைகளில் பணி புரிந்திருக்கிறார். உடல் முதல் உலகம் வரை அனைத்து விஷயங்களும் அவரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மன ஆய்வுகளை தனிப்பட்ட முறையில் தன் அனுபவத்துக்காக செய்வதுண்டு. எப்பேர்ப்பட்ட கடினமான, பிடிவாதமான, பயிற்றுவதற்கியலாத நபரையும் மிகத் திறமையாக கையாண்டு நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்.
தனிமனிதச் சிறப்பியல்பைப் பற்றிய வகுப்புகள் எடுப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்களுக்கு அவரது குழுவுடன் சென்று பயிற்றுவிப்பார்.
ஒருவன் தன் பெயரின் பின்னால் போடும் பட்டங்களினால் ஒரு பயனும் இல்லை. அப்படி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சுய அறிவோ, சிந்தனையோ, மற்ற பொது அறிவோ முழுவதுமாக இருக்காது என்பார்.
அதற்கு உதாரணமாக, வெறும் ஆரம்பப்பள்ளி படிப்பு மட்டுமே படித்த ஜேப்பியார், தனிப்பட்ட, அரசியல் விசயங்கள் தவிர்த்து பார்த்தால், இன்று பல கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். இவருக்கு எந்தப் பட்டப்படிப்பு கை கொடுத்தது? என கேட்டார்.
நகருக்கு வெளியே கல்லூரிக் கட்டிடங்கள் கட்டி வைத்து நடத்தும்போது என்னென்ன பிரச்சனைகள் வந்தது என ஆராய்ந்து, அதற்கு உண்டான தீர்வையும் கண்டார்.அதனால் அவரால் கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்று கூறினார்.
எப்போதும் என் குருவுக்கு சவாலான பணிகளை எடுத்து வெற்றிகரமாக முடிப்பதில் அதிக ஆர்வமுண்டு. இப்போது கூட அடுத்த சவாலை எதிர் கொண்டு வெற்றிக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறார். என்னைப் போல் வேறு சிலரையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
என்னுடைய இந்த எழுத்துக்களுக்கும் அவர் தான் தூண்டுகோலாயிருந்தார். இந்த வேளையில் என் குருவுக்கு நன்றி சொல்வது தான் பொருத்தமாயிருக்கும்.
நன்றி! நன்றி!! நன்றி!!!





***************
என்னுடைய இந்த எழுத்துக்களுக்கும் அவர் தான் தூண்டுகோலாயிருந்தார். இந்த வேளையில் என் குருவுக்கு நன்றி சொல்வது தான் பொருத்தமாயிருக்கும்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
****************
குருவை போற்றும் உங்கள் பண்பும் உயர்ந்ததே.
இருவரது முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் !
எதுக்குங்க சஸ்பென்ஸ்,அவரை அடையாளம் காட்டுவதை அவர் விரும்பவில்லையா?
/// குருவை போற்றும் உங்கள் பண்பும் உயர்ந்ததே. ///
இந்த பண்பும் அவரிலிருந்து கற்றது தான். நன்றி ஜி.கே.
/// அடையாளம் காட்டுவதை அவர் விரும்பவில்லையா? ///
ஐயோ! அது அவருக்கு பிடிக்காது.
நன்றி வடுவூராரே!
உங்கள் இருவரின் முயற்சிகளும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
நட்சத்திரமே !
என்ன பதிவுகள் குறைச்சலா இருக்கு, நட்சத்திர வாரத்தில் அடி தூள் பறத்தவேணாமா?
/// பதிவுகள் குறைச்சலா இருக்கு ///
எனக்கும் இந்த வருத்தம் இருக்கு பிரபு!
எந்த வாரமும் இல்லாமல் இந்த வாரம் (நட்சத்திர வாரத்தில்) அலுவலகப் பணி அதிகமாகி விட்டது.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மங்கை!
நன்றாக எழுதியுள்ளீர்கள்!
பாராட்டுக்கள்!
தங்களது பாராட்டுகளுக்கு நன்றி சிவபாலன்…
வாழ்த்துக்கள் ! நல்ல பதிவு! நான் இப்பொழுதுதான் , பதிவுகளைப் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். 1ந்தேதிக்கு பிறகு ஒரு பதிவு கூட இடவில்லையே ! வேலைப்பளுவா?
நன்றி! ராமன்.
ஆம்! வேலைப்பளு அதிகமாகத் தான் இருக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் புதிய பதிவு வரும்.