நரசிம்மன் வாத்தியார் இருக்கார்ல,
ம்…….. சொல்லுங்கப்பா!
உனக்கு கூட தெரியும் அவர. அதான்டா அவர் பையனுக்கு பனியன்லாம் வாங்கிக் குடுத்தேல்ல…
ஆமா! சொல்லுங்க.
அவர் சொந்தக்காரங்க தான்பா, காலையில திருப்பூர் வருவாங்கபா…. பஸ் ஸ்டாண்ட்லருந்து உன்னை கூப்பிடுவாங்க. நீ போய் அவங்க கூட இருந்து என்ன உதவி வேணுமோ செஞ்சு கொடு.
ம்…….. சரிப்பா!
அப்பா இதுவரை யாருக்கும் இது போல சொன்னதில்லை.
காலை ஏழு மணி என்பது பாதி சாமம். தூக்கம் அறுத்தபடி ஒரு அலைபேசி அழைப்பு.
தம்பி…. அப்பா சொன்னாங்கள்ள….
ஆமா! சொன்னாங்க! சொல்லுங்க!
குத்தாலத்து பக்கத்துல இருக்க இலஞ்சியிலருந்து வந்திருக்கோம். ஒரு அட்ரஸ தேடி கண்டுபிடிக்கணும்.
நான் ஆபீஸ் வர்றதுக்கு பத்து மணியாகுமே……
இப்பம் பஸ்ஸ்டாண்ட்ல தான் இருக்கோம். நாங்களே நீங்க வர்ற வரைக்கும் தேடிப் பாக்கிறோம்.
சரி! அப்ப நான் பத்து மணிக்கு மேல கூப்பிடறேன்.
அலுவலக அலிபாபா குகைக்குள் வந்தவுடன், வேறு விசயங்களோ, நினைவுகளோ, வராது.
திரும்பவும் அப்பாவிடமிருந்து அழைப்பு. என்ன ஆயிற்று? என்று. இனி தான் அவர்களை பார்க்க போக வேண்டும் என்று பதிலினேன்.
போய் பாருப்பா! வாத்தியார் நமக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. அதுக்கு தான் உங்கிட்ட நேத்துலருந்து படிச்சு, படிச்சு சொன்னேன்.
இப்ப போறேன்ப்பா!
ஒரு மத்திம வயதுடையவரும், ஒரு முதியவரும் வந்திருந்தார்கள். அந்த தாத்தாவின் பேரன், ஊரிலிருந்து வீட்டிற்கு தெரியாமல் திருப்பூர் வந்திருக்கிறான். திருப்பூரிலிருந்து ஊரிலிருக்கும் நண்பனுக்கு ஒரு தடவை தொலைபேசியிருக்கிறான்.
தாத்தாவின் உறவினர்கள் அதே எண்ணுக்கு பேசி அது ஒரு காலணி விற்பனையகம் என்று கண்டுபிடித்து, பையன் அங்கு தான் வேலை செய்யக் கூடுமென முகவரியும், உரிமையாளர் பெயரையும், தொலைபேசி எண்ணையும் எழுதி கொடுத்து விட்டிருக்கிறார்கள்.
காலையிலிருந்து அஞ்சு தடவ இந்த நம்பருக்கு அடிச்சு பார்த்துட்டோம். யாரும் எடுக்கலை. பஸ்ஸ்டாண்ட சுத்தி எல்லா செருப்பு கடயிலயும் விசாரிச்சு பார்த்துட்டோம். கடயக் கண்டுபிடிக்க முடியலை.
எண்ணை வாங்கி பார்த்தால், அது அலைபேசி எண். என்னுடைய அலைபேசியிலிருந்து அழைத்ததுமே, ஒரு நபர்
பேசினார். முகவரியை வாங்கிக் கொண்டு, முதியவரை பேருந்து நிலையத்தில் காத்திருக்க சொல்லி விட்டு, மத்திம வயதுக்காரருடன் காலணியகம் சென்றேன். முதியவர் முகத்தில் இப்போது தான் பேரன் கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கை ரேகைகள்.
காலணியகத்தில் அலைபேசி இணைப்பை பொதுத்தொலைபேசியில் பொருத்தி இருக்கிறார்கள் என்று அங்கு சென்ற பின் தான் தெரிந்தது.
போன ஞாத்துக் கெழம நாலஞ்சு பசங்க சாயந்தரமா வந்து போன் பேசிட்டிருந்தாங்க கண்ணு. நீங்க சொல்றத வச்சு பாத்தா அவங்களாத்தான் இருக்கும். எங்கேர்ந்து வந்தாங்கனு தெரியல கண்ணு. என்ற விசயத்தை மட்டும் சொன்னார்.
இனிமேல் வந்தால் எனக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டு என கூறிவிட்டு பேருந்து நிலையம் திரும்பினோம்.
திருப்பூரில் வந்திறங்கும் வேலையில்லாத இளைஞர்களை, வேலை வாங்கித் தருகிறேன் என கூட்டிக் கொண்டு போக பலர் சுற்றிக் கொண்டிருப்பர். ஒரு சிலர் தனியார் (தனியாக ஏமாற்றும்) வேலை வாய்ப்பகங்களில் விட்டு விட்டு கமிசன் தொகையை வாங்கி சென்று விடுவர்.
ஒரு சில உடல் வலிமையான இளைஞர்களை, பனியன் கம்பெனியில் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி ஏமாற்றி, குழாய் துளையிடும் வண்டியில் விட்டு விடுவர். போரிங் வண்டி எங்கெங்கு செல்லுமோ, கூடவே சென்று வேலை பார்க்க வேண்டும். பெரும்பாலும், வட மாநிலங்களுக்கு வண்டியுடன் கூட்டி சென்று விடுவார்கள். ஊர் திரும்பும் வரை காசு என்பதே கண்ணில் காட்ட மாட்டார்கள். அவர்களுடனேயே இருக்க வேண்டியது தான். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு எத்தனை மாதங்களோ, வருடங்களோ தெரியாது.
உடல் வலு இல்லாத இளைஞர்களாக இருந்தால், பல வித ரசாயனங்களில் கை, கால் நனைக்கிற சாயப்பட்டறைகளில் வேலைக்கு சேர்த்து விடுவார்கள். சில மாதங்களில் தோல் அரிப்பு மற்றும் பல நோய்கள் வந்து சேரும். இதற்கிடையில் ஒரு மாத சம்பளத்தை முன்பணமாக வேலை வாய்ப்பகங்களில் பிடுங்கிக் கொள்வார்கள்.
பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு சில அடிகள் தூரத்திலிருந்து முதியவர் அமர்ந்திருக்குமிடம் நான் நெருங்குவதற்குள் என் பின்னேயும், என்னைச் சுற்றியும் பேரன் வருகிறானா? காணோமே? என்று முதியவரின் கண்கள் அலை பாய்ந்தன. பலவித முகமாற்றங்கள், ஏமாற்றங்கள்.
என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேரன் அங்கு இல்லை என சொல்லக் கூட என்னால் முடியவில்லை. சே! இந்த வயதில் இப்படி ஒரு சிரமமா? மனக்கவலையா? பல நூறு கிலோ மீட்டர்கள் பேருந்தில் பயணித்து வந்தும் ஏமாற்றமா?
முகவரி இருந்துமே சிரமப்பட்டு தான் திருப்பூரில் ஒரு இடத்தையோ, நபரையோ கண்டுபிடிக்க முடியும். அதிலு
ம் ஒரு தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்வார்கள். குமார் என ஒரு கம்பெனியில் கேட்டால், கட்டிங் குமாரா? பேக்கிங் குமாரா? அயர்னிங் குமாரா? டெய்லரா? ஆபிஸ் குமாரா? என தலை சுற்றும்படி நம்மிடமே திருப்பிக் கேட்பார்கள்.
பேரன் தேர்வில் மதிப்பெண் குறைந்த காரணத்தால், பயந்து திருப்பூருக்கு வந்து விட்டதாகவும், இருதய கோளாறு இருப்பதாகவும், அதனால் தான் தாத்தா இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கிறார் என தெரிந்தது.
மதிய உணவிற்கு பின் அவர்களை திரும்பவும் பேருந்தில் அனுப்பிவிட்டு அலிபாபா குகைக்கு திரும்பினேன்.









பெற்றோர்கள் அளவுக்கு மீறி தண்டனைக் கொடுப்பதால் பயந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் பலர் உண்டு.
12-15 வயதில் வீட்டைவிட்டு ஓடவேண்டும் என்ற குறுகுறுப்பு பலருக்கு இருக்குமாம்.
வருத்தமாக உள்ளது. நம்மை போல திருப்பூர் வாசிகள் நமது பிழைப்பைப் பார்த்து போய்க்கொண்டிருக்கிறோம்.. என் இன்றைய முன் குறிப்புகளிலும் இதுபோன்றோதொரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.. நம்மால் எதாவது செய்ய இயலுமா? சந்திக்கும்போது சிந்திப்போம்..
////பெற்றோர்கள் அளவுக்கு மீறி தண்டனைக் கொடுப்பதால் பயந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் பலர் உண்டு/////
பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்து, மதிப்பெண் குறைந்தால் தண்டனை இன்னும் மோசமாக இருக்கும் கோவியாரே!
கேபிகே,
முன் குறிப்புகள் நன்றாக இருக்கிறது. சந்திப்போம். சிந்திப்போம்.
ஓ கொடுமையான விசயம் இது.. ..
//பின்னேயும், என்னைச் சுற்றியும் பேரன் வருகிறானா? காணோமே? என்று முதியவரின் கண்கள் அலை பாய்ந்தன. பலவித முகமாற்றங்கள், ஏமாற்றங்கள்//
//பேரன் தேர்வில் மதிப்பெண் குறைந்த காரணத்தால், பயந்து திருப்பூருக்கு வந்து விட்டதாகவும், இருதய கோளாறு இருப்பதாகவும், அதனால் தான் தாத்தா இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கிறார் என தெரிந்தது//
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
உங்கள் படங்கள் உயிரோட்டமுள்ளதாக இருந்தது
இது அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் கொடுமையான விசயம் முத்துலட்சுமி!
/// உங்கள் படங்கள் உயிரோட்டமுள்ளதாக இருந்தது ///
படங்களையும் கூகிளில் தேடித் தேடி தான் கண்டுபிடித்து போட்டிருக்கிறேன் கிரி!
துளசி டீச்சர்,
என்னோட பதிவுகளெல்லாம் படிப்பீங்களா?
வருகைக்கு நன்றி!